Perambalur complained that VAO was struck by the District Secretary of the MDMK

பெரம்பலூர் அருகே விஏஓ மீது மதிமுக மாவட்ட செயலாளர் மகன் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச்சேர்ந்தவர் மணிவண்ணன் மகன் சுரேஷ்( வயது 34), இவர் பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் ஒரு நிலப்பிரச்சினை தொடர்பாக அரசு தரப்பு சாட்சியாக நீதி மன்றத்தில் சுரேஷ் ஆஜராகியுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு தரப்பை சேர்ந்த பெரம்பலூர் மாவட்ட மதிமுக செயலாளர் துரைராஜ் மகன் கலைஞர்(40) என்பவர் நீ ஏன் எங்களது வழக்கு தொடர்பாக நீதி மன்றத்தில் ஆஜரானாய் என பெரம்பலூர்-விளமுத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் தனியாக சென்ற சுரேஷை வழி மறித்து தகாத வார்த்தையில் பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுரேஷ் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். மேலும், தன்னை தாக்கியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மதிமுக மாவட்ட செயலாளர் மகன் கலைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கிராம நிர்வக அலுவலர் ஒருவர் அரசியல் கட்சி மாவட்ட செயலாளர் மகனால் தாக்குதலுக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, இதற்கு கண்டனம் தெரிவித்து வருவாய்த் துறையினர் போராட்டத்தில் ஈடுபட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!