Perambalur: El Niño – Alathur Block Horticulture Department advises farmers to insure their horticultural crops.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடப்பு 2026 குறுவை பருவத்தில் தோட்டக்கலை பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு செய்து கொள்ள ஆலத்தூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளார். இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பயிர் இழப்பிலிருந்து விவசாயிகளின் நலன் மற்றும் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் 2026-27ஆம் ஆண்டில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது நிலவும் எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதால், குறுவை மற்றும் மானாவாரி பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 2026 குறுவை பருவத்தில், மரவள்ளி பயிருக்கு ஆலத்தூர் வட்டாரம் கூத்தூர் குருவட்டத்திற்கும் வெங்காயம் பயிருக்கு செட்டிக்குளம் மற்றும் கொளக்காநத்தம் குருவட்டத்திற்கும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை 25/06/2026 முதல் விவசாயிகள் தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம். குறுவை வெங்காயம் பயிர்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் 31.08.2026 ஆகும். மரவள்ளி பயிருக்கு 15.09.2026 வரை காப்பீடு செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ். மாவட்டங்களின் பரிந்துரைப்படி மகசூல் இழப்பு, விதைப்பு / நடவு செய்ய இயலாத நிலை, விதைப்பு / நடவு பொய்த்தல் பகுதி சார்ந்த மற்றும் பயிர் வளர்ச்சி கால இடர் நிகழ்வுகளால் ஏற்படும் இழப்பு மற்றும் அறுவடைக்குப் பின் ஏற்படும் இழப்பு போன்ற இனங்கள் காப்பீடு செய்யப்படுகின்றன.

எனவே, கடன் பெறும் விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள், இ-சேவை மையங்கள் அல்லது தேசிய பயிர்க் காப்பீட்டு இணையதளத்தில் https://pmfby.gov.in விவசாயிகள் கார்னர் வாயிலாக நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கான இறுதி தேதி எக்காரணத்திற்காகவும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல் / விதைப்பு அறிக்கை.கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பெற்றுக்கொண்டு. அதில், தாங்கள் காப்பீடு செய்த பயிர் மற்றும் அதற்கான கிராமம் / குறுவட்டம் உள்ளிட்ட விவரங்கள் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநரையோ தோட்டக்கலை அலுவலரையோ உதவி தோட்டக்கலை அலுவலரையோ வங்கி கிளைகளையோ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்திவரும் இப்பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் அறிவிக்கை செய்த பகுதிகளில் அறிவிக்கை செய்த பயிர்களைக் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!