Perambalur: Elderly man killed in hit-and-run by unidentified vehicle! Police investigating!
பெரம்பலூர் – துறையூர் நெடுஞ்சாலையில், நக்கசேலம் பிரிவு அருகே வந்த பைக் மீது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாமக்கல் மாவட்டம், பவித்திரம் நடுத்தெருவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் மகன் சிங்காரம் (66). இவர் நேற்று மதியம் பவித்திரத்தில் இருந்து பெரம்பலூர் நோக்கி ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். ‘ஸ்கூட்டர் நக்கசேலம் பிரிவு அருகே துறையூர் – பெரம்பலூர் சாலையில் வந்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மிதந்து பரிதாபமாக துடிதுடித்து பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்த, பெரம்பலூர் ஊரக காவல் நிலைய போலீசார், சம்பவ இடம் சென்று சிங்காரத்தின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து, எஸ்.எஸ்.ஐ பாண்டியன் வழக்குப் பதிவு செய்து மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தால், அப்பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.