Perambalur: Farmers protest demanding relief for maize crop damaged by wind and rain!
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பலத்த காற்றுடன் பெய்த மழையினால் சேதமடைந்த மக்காச்சோளப் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த வாரமும் அதற்கு முந்தைய வாரமும் பலத்த காற்றுடன் கோடை மழை பெய்தது. இந்த மழையினால் விவசாயிகள் ஒருபுறம், மகிழ்ச்சி அடைந்தாலும், மற்றொருபுறம் வேப்பந்தட்டை வட்டாரத்தில் பசும்பலூர், வெல்லுவாடி,பிம்பலூர், கை.களத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இரவை பாசனத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோள பயிர்கள் அடியோடு சாய்ந்து சேதமடைந்தது. இதே போல வாழை, எள், நெல் மற்றும் பருத்தி உள்ளிட்ட பயிர்களும் பல்வேறு இடங்களில் சேதம் அடைந்தது. இது மட்டுமின்றி பெரம்பலூர் மாவட்டத்தில் செயல் பட்டு வரும் பல்வேறு கோழி பண்ணைகளும் இந்த பலத்த காற்றினால் சேதம் அடைந்தது. இவ்வாறு சேதமடைந்த விளை பொருட்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாவட்ட தலைவர் செல்லதுரை தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் முன்பு அதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது தங்களுக்கு உரிய நிவாரண வழங்க வேண்டும், அதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அதனை தொடர்ந்து தங்களது கோரிக்கையை கலெக்டரிடம் மனுவாக கொடுத்து விட்டு கலைந்து சென்றனர்.