Perambalur: National Road Safety Awareness Rally; Ministers Ganesan and Sivashankar flagged off the event!
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் நிறைவு விழாவை முன்னிட்டு, போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் போக்குவரத்துத்துறை சார்பில் பாலக்கரை பகுதியில் நடந்த கல்லூரி மாணவ – மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கலெக்டர் கிரேஸ், எம்.எல்.ஏ. பிரபாகரன், போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேரா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
”விபத்தில்லா தமிழ்நாடு” என்ற இலக்கினை எய்திடும் வகையில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 36வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவினை முன்னிட்டு 01.01.2025 முதல் 31.01.2025 வரை மாவட்ட அளவிலான பல்வேறு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தி விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் நிறைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ரோவர் பொறியியல் கல்லூரி மற்றும் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பாலக்கரையில் தொடங்கி, நகரின் முக்கிய சாலை வழியாகச் சென்று ரோவர் ஆர்ச் பகுதியில் முடிவடைந்தது பேரணியின்போது, மாணவ,மாணவிகள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், துணை போக்குவரத்து ஆணையர் செல்வகுமார், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கே.ரவி (பெரம்பலூர்), அறிவழகன்(அரியலூர்), மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜாமணி, தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் கிள்ளிவளவன், நகராட்சி துணைத்தலைவர் ஆதவன், கல்லூரி மாணவ, மாணவியர்கள், ஓட்டுநர் பயிற்சி பள்ளி நிர்வாகிகள், ஓட்டுநர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.