Perambalur: Siruvachur Madurakaliyamman temple bill offering collection of Rs.37.44 lakh!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ 37 .44 லட்சம் வசூலானது. மதுரகாளியம்மன் கோயிலில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்க, வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம். இந்த உண்டியல்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவதும் வழக்கம்.
அதன்படி இன்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்க, வெள்ளி, வெளி நாட்டு பணம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் பெரம்பலூர் உதவி ஆணையர் உமா தலைமையில், கோவில் செயல் அலுவலர் அசானாம்பிகை, சரக ஆய்வாளர் தீபலெட்சுமி, கண்காணிப்பாளர் நிஷாந்திரி ஆகியோர் முன்னிலையில் கோவிலில் உள்ள 7 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது.
கோவில் உண்டியல்களில் இருந்து வருவாயாக ரூ.37லட்சத்து 43 ஆயிரத்து 597 ரொக்கமும், 198 கிராம் தங்கமும், 613 கிராம் வெள்ளியும், டாலர், தினார் உள்ளிட்ட 101 எண்ணிக்கையிலான வெளிநாட்டு பணமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், ஐயப்பா சேவா சங்கம், ராமக்கிருஷ்ணா, சாரதா கல்லூரியை சேர்ந்த மாணவிகள் மற்றும் ஆன்மிக அன்பர்கள் என சுமார் 100 பேர் ஈடுபட்டிருந்தனர். கனரா வங்கி சார்பில், பணம் எண்ணும் மிசனை கொண்டு பணத்தை எண்ணி எடுத்து சென்றனர். இதற்கு முன்பு கோவில் உண்டியல் கடந்த டிசம்பர் மாதம் 4ம்தேதி திறந்து எண்ணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.