Perambalur Visuvakudi Dam recreational park: officials review

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமம், கல்லாற்றின் குறுக்கே விசுவகுடி பகுதியில் புதிய அணை அமைக்கும் பணி ரூ.33.07 கோடியில் மேற்கொள்ளப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவால் 27.02.2016 அன்று பொது மக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
05.08.2017 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் பழனிசாமியால் விசுவகுடி அணைக்கட்டு பகுதியில் ரூ.2.00 கோடி மதிப்பீட்டில் பொழுது போக்கு பூங்கா அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
இப்பூங்காவில் குழந்தைகள் விளையாட பூங்கா, விளையாட்டு சாமன்கள், செயற்கை நீர் ஊற்று, அழகிய பூந்தோட்டங்கள், மரங்கள், உணவு விடுதி, தூய்மையான குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள், அலுவலக அறைகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தம் ஆகிய வசதிகள் கொண்டு, திட்ட மதிப்பீடு பொதுப்பணித்துறை மூலம் தயார் செய்து, மாவட்ட ஆட்சியரின் மூலம் பரிந்துரை செய்யப்பட்டு சுற்றுலா ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் ஆட்சியர் வே.சாந்தா இன்று (08.12.2017) விசுவக்குடி அணைக்கட்டு பகுதியில் அமையவுள்ள பூங்காவிற்கான இடம் குறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் நேரில் ஆலோசனை மேற்கொண்டு, பூங்காவினை பொதுமக்களின் வசதிக்காக அனைத்து வசதிகளுடன் சிறப்பான முறையில், விரைந்து கட்டுமானப் பணிகளை முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான வழிமுறைகள் குறித்தும், ஆலோசனை மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விசுவக்குடி அணையில் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து மற்றும் அணையின் கொள்ளளவு மற்றும் பராமரிப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டறித்தார்.
அப்பொழுது பொதுப்பணித்துறை சார்பில் அணையை பாதுகாக்கும் பொருட்டு இரவு, பகல் களப் பணியாளர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தவும், கதவணையை இயக்க மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி, மனிதசக்தி ஆகியவைகளைக் கொண்டு இயக்க தயார் நிலையில் இருக்கவும் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மேற்கண்ட ஆய்வின்போது பொதுப்பணித்துறை, வருவாய் துறை உள்ளிட்ட அரசு பணியாளர்கள் உடனிருந்தனர்.









kaalaimalar2@gmail.com |
9003770497