Perambalur: What Must Candidates and Agents Adhere to at the Vote Counting Center? Briefing Meeting Held Under the Leadership of the District Collector and Superintendent of Police!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் வாக்குகளை எண்ணும் நடைமுறை குறித்து வேட்பாளர்கள், முகவர்களுக்கு விளக்கும் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான மிருணாளினி, போலீஸ் எஸ்.பி பிரபாகர் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அப்போது கலெக்டர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையமாக பெரம்பலூர் கோனேரிப்பாளையம் அருகே அமைந்துள்ள ஆதவ் பப்ளிக் பள்ளி தேர்வு செய்யப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையம் உள்ளது.

147.பெரம்பலூர்(தனி) தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறை ஆதவ் பப்ளிக் பள்ளி பிளாக் ஏ பிரிவில் தரை தளத்திலும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறை பிளாக் ஏ பிரிவில் முதல் தளத்திலும் அமைந்துள்ளது.

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள், VVPAT கருவிகளில் உள்ள சீட்டுகளை எண்ணுவதற்கு தலா 14 மேசைகளும், ராணுவத்தினர் பதிவு செய்துள்ள தபால் வாக்குகளை பிரிப்பதற்கு தலா ஒரு மேசையும், தபால் வாக்குகளை எண்ணுவதற்கு தலா 4 மேசைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள் 18 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும். மத்திய அரசு அல்லது மாநில அரசுகளில் நேரடி அலுவலர் / பகுதிநேர அலுவலர் / அரசு உதவி பெறும் நிறுவன அலுவலராக இருக்க கூடாது. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சித் தலைவர்களாக இருக்கக் கூடாது.

முகவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு காலை 6.30 மணிக்கு வருகை தர வேண்டும். வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும்போது, படிவம் 18-ன் நகல் சமர்ப்பிக்க வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட QR Code Based புகைப்பட அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் வரை, முகவர்கள் வாக்கு எண்ணிக்கை கூடத்திற்கு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் பேனா அல்லது பென்சில், வெள்ளைக் காகிதம் அல்லது குறிப்பேடு, 17 சி படிவத்தின் நகல் ஆகியவற்றை மட்டும் எடுத்து செல்லலாம். கைப்பேசி மற்றும் எந்த ஒரு மின்னணு சாதனங்களையும் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. தபால் வாக்கு எண்ணிக்கை முதலாவதாக தொடங்கப்பட்டு, முப்பது நிமிடங்களுக்குப் பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர எண்ணிக்கை தொடங்கப்படும். தபால் வாக்குகள் எண்ணிக்கை முடிந்த பின்னரே மின்னணு இயந்திரங்களின் கடைசி 2 எண்ணிக்கை தொடரும். வாக்கு எண்ணுகை மைய முகவர்களின் நியமனத்தை இரத்து செய்திட வேட்பாளருக்கு அல்லது அவரது தேர்தல் முகவருக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

வாக்கு எண்ணும் மையத்திற்குள் வரும் முகவர்கள் நியமனக் கடிதத்தில் உள்ள உறுதிமொழியில் தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் கையொப்பமிட வேண்டும். எந்த ஒரு முகவரையும் வாக்கு எண்ணுகை கூட்டத்திற்கு முன்பாக அவரது உடல் மற்றும் உபகரணங்களைச் சோதனை செய்ய தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அதிகாரம் உண்டு.

தேர்தல் நடத்தும் அலுவலர் பிறப்பிக்கும் உத்தரவுகள் அனைத்தையும் வாக்கு எண்ணுகை மைய முகவர்கள் ஏற்று செயல்பட வேண்டும். உத்தரவை மீறி செயல்படுகின்ற எந்தவொரு நபரும் வாக்கு எண்ணுகை கூடத்திலிருந்து வெளியேற்றப்படலாம் என்பதை அனைவரும் அறிந்திருக்க வேண்டும்.தேர்தல் நடத்தும் அலுவலர் வாக்குகளை எண்ணத் தொடங்குவதற்கு முன்பாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 128-ன் கீழான விதி முறைகளை அனைவரும் அறியும்படி விளக்கிக் கூறுவார்.

எண்ணுகை அறையின் உள்ளே இருக்கின்ற ஒவ்வொரு நபரும் சட்டப்படி வாக்குப்பதிவு ரகசியத்தை காத்திட ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். ரகசியத்தை மீறுகின்ற வகையில் எவருக்கும் தெரிவிக்கக் கூடாது. சட்ட விதிமுறைகளை மீறும் நபர்கள் குற்றவியல் நடவடிக்கைக்கு ஆளாவர். வாக்கு எண்ணுகை மையத்தினுள் அனுமதிக்கப்பட்டுள்ள வேட்பாளர் (அ) முகவர்கள் (அ) அரசியல் கட்சியினர் உணவு மற்றும் சிற்றுண்டி அருந்த தனி உணவு அருந்தும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற அனைவரும் தங்கள் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும், என தெரிவித்தார். இதில் தேர்தல் தொடர்புடைய பணியாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!