Relocation of polling stations; Officials in Perambalur consult with recognized political parties
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147.பெரம்பலூர்(தனி) சட்டமன்ற தொகுதி மற்றும் 148.குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் மீது உள்ள ஆட்சேபனை அல்லது கூற்றுகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் இறுதி செய்ய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 147.பெரம்பலூர்(தனி) சட்டமன்ற தொகுதியில் 332 வாக்குச்சாவடி மையங்களும், 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் ஆக மொத்தம் 652 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இது தொடர்பாக, வரைவு வாக்குச்சாவடி பட்டியல் பொதுமக்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் பார்வைக்காகவும், கூற்றுகள் மற்றும் ஆட்சேபணைக்காகவும் 13.09.2021 அன்று பெரம்பலூர் மாவட்ட அரசு வலைதளத்தில் (https://perambalur.nic.in) வெளியிடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில், 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 26 வாக்குசாவடி மையங்கள் மற்றும் 148.குன்னம் சட்டமன்ற தொகுதியில் 7 வாக்குச்சாவடி மையங்களின் கட்டிடங்கள் பழுதடைந்துள்ளதால் வேறு கட்டிடத்திற்கு மாற்றியமைக்க உத்தேசிக்கபட்டு கருத்துருக்கள் வரப்பெற்றுள்ளது. புதிய வாக்குச்சாவடி மையங்கள் ஏதும் உருவாக்கபடவில்லை.
மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்தோ, அரசியல் கட்சியினரிடமோ அல்லது வேறு எந்த அமைப்புகளிடமிருந்தோ ஆட்சேபனை ஏதும் பெறப்படவில்லை. வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தம், 2022 முன்னிட்டு, 01.01.2022 ஐ தகுதி நாளாக கொண்டு நவம்பர் மாதம் சிறப்பு சிறப்பு சுருக்க திருத்தம் பணி தொடங்கபடவுள்ளது. இதற்கென 13.11.2021, 14.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 ஆகிய தினங்களில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. சிறப்பு முகாம்கள் நடைபெறும் தினங்களில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைத்திடவும் உரிய ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், மாற்றம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளல் மற்றும் நீக்கம் செய்தல் ஆகியவற்றிற்கு பொதுமக்களுக்கு உதவி செய்திடும் பொருட்டு நாளது வரை வாக்குச்சாவடி முகவர்களை நியமனம் செய்யாத அங்கீகரிக்கபட்ட அரசியல் கட்சியினர் ஒவ்வொரு வாக்குசாவடி மையத்திற்கும் தனிதனியாக வாக்குசாவடி முகவர்களை நியமனம் செய்து ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், டி.ஆர்.ஓ., நா.அங்கையற்கன்னி, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி சந்திரமோகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தி. சுப்பையா, தனி வட்டாட்சியர் (தேர்தல்) சீனிவாசன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.