Rs.1,10,000 fine to private buliding, and petrol bunk owners for The mosquito-producing – Perambalur Collector
பெரம்பலூர் நகராட்சியில் டெங்கு கொசுப்புழுக்களை உருவாகாமல் கட்டுப்படுத்த நகராட்சியின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், டெங்கு கொசுப் புழுக்கள் ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு, டெங்கு கொசுப் புழுக்கள் உருவாகும் இடங்களை கண்டறிந்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதத் தொகை விதிக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டு வருகிறார்.
அதன்படி, இன்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் பெட்ரோல் பங்குகள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்களுக்கு நேரில் சென்று, டெங்கு கொசுப் புழுக்கள் உருவாக வாய்ப்புள்ளதா என்று ஆய்வு மேற்கொண்டார்.
பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் உள்ள மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அங்கு வைக்கப்பட்டிருந்த மின் உதிரி பாகங்கள் மற்றும் கம்பங்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திலும், அலுவலகத்தைச் சுற்றியுள்ள இடத்திலும் நீர் தேங்கியிருந்ததைப் பார்வையிட்ட ஆட்சியர், இதுபோன்று நீர் தேங்கியிருந்தால் அதில் கொசுப்புழு உற்பத்தியாகும் வாய்ப்பு அதிகம் எனவே, இன்றும் ஒரு வார காலத்திற்குள் அனைத்துப்பகுதிகளையும் சுத்தம் செய்து கொசு உற்பத்தியாகாக வகையில் பராமரிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
பின்னர் துறைமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்கிற்கும், அதன் அருகில் கட்டப்பட்டு வரும் தனியார் கட்டடத்திற்கும் சென்று ஆய்வு மேற்கொண்ட போது, அரசின் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறங்களையும், கட்டடங்களையும் பராமரிப்பின்றி வைக்காதீர்கள் என்று பல்வேறு வகையிலான விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகும் நீர் தேங்கும் வகையிலும், சுகாதாரமின்றியும், கொசுப்புழு உற்பத்தியாகும் நிலையில் பராமரிப்பின்றி இருந்ததைப் பார்த்த மாவட்ட ஆட்சியர் பெட்ரோல் பங்கிற்கு ரூ.10,000ம், தனியார் கட்டட உரிமையாளருக்கு ரூ.1லட்சமும் அபராதமாக விதிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். மீண்டும் அடுத்த ஆய்விற்கு அலுவலர்கள் வருகை தரும்போது இதுபோன்ற சூழல் இருக்கக்கூடாது என்றும் அவர்களை எச்சரித்தார்.
இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், நகராட்சி ஆணையர் முரளி, வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.