Rs. 73 lakh power line: Minister S.S. Shiv inaugurated.
பெரம்பலூர் மாவட்டம், புதுக்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து கொளக்காநத்தம் ஊராட்சிக்கு ரூ.73.0 லட்சம் மதிப்பீட்டில் 22 கி.வாட் கொண்ட புதிய மின்வழி பாதை அமைக்கும் பணியினை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கொளக்காநத்தம் கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
புதுக்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து 18 கி.மீ. சுற்றளவில் காரை, வரகுபாடி, சா.குடிகாடு, தெற்குமாதவி, சிறுகடம்பூர் வழியாக கொளக்காநத்தத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. அதிக சுற்றளவில் மின் இணைப்பு பாதை வந்ததால் மின் இழப்பு, குறைந்த தாழ்வழுத்த மின்சாரம் மற்றும் மின் தடை அடிக்கடி ஏற்பட்டதால், இரவு நேரங்களில் பழுது ஏற்படும் வேளைகளில், பாதிப்பு ஏற்பட்டது. இதனை மாற்றி தடையில்லா மின்சாரமும், சரியான மின் அழுத்தத்தில் மின் விநியோகம் செய்திட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தன் பேரில், புதுக்குறிச்சி துணை மின் நிலையத்திலிருந்து காரை வழியாக 5.7 கி.மீ. தூரத்திற்கு ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் கொளக்காநத்தம், அயினாபுரம், அனைப்பாடி ஆகிய கிராமங்களுக்கு தனி மின்வழிப்பாதை அமைக்கப்படுகிறது. இதன்மூலம் பல்வேறு கிராமங்களுக்கு சுற்றி வரவேண்டிய நிலை இல்லாமல் நேரடியாக மின் விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மின் தடை மற்றும் மின் இழப்பு தடுக்கப்படும்.
மேற்கண்ட தனி மின் வழிப் பாதை ஏற்படும் பட்சத்தில் கொளக்காநத்தம், அனைப்பாடி, அயினாபுரம் கிராமங்களில் உள்ள 2,500 மின் இணைப்பாளர்களுக்கு தடையில்லா மின் வசதி வழங்குவதோடு, குறைந்த தாழ்வழுத்த மின்சாரம் சரி செய்யப்படும். இதன்மூலம் சீரான முறையில் மின்சாரம் வழங்கப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆலத்தூர் யூனியன் சேர்மன் என்.கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சித் தலைவர்கள் என்.ராகவன் (கொளக்காநத்தம்), பாலமுருகன் ( அயினாபுரம்) உட்பட மின்வாரியம் உள்ள அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.