Since March 6 Distributed Applications for TET exam
பெரம்பலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்துள்ள தகவல்
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசின் வழிகாட்டுதலின்படி ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 முறையே 29.04.2017 மற்றும் 30.04.2017 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்கடேசபுரம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் தனலெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, வி.களத்தூர், அகரம் புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி, பாடாலூர் அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒதியம் வான்புகழ் மேல்நிலைப்பள்ளி, சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50-ஐ செலுத்தி 06.03.2017 முதல் 22.03.2017 வரையுள்ள நாட்களில் (ஞாயிற்றுக்கிழமை தவிர) காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை விற்பனை செய்யப்பட உள்ளன.
மேலும் மாவட்ட வாரியான விற்பனை மையங்கள் தொடர்பாக விவரங்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்திலும் காணலாம். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். தாள் 1 மற்றும் தாள் 2 ஆகிய இரு தேர்வுகளை எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் தனித்தனியான விண்ணப்பங்களில் விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வெங்கடேசபுரம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துறையூர் சாலையிலுள்ள தனலெட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையங்களில் 06.03.2017 முதல் 23.03.2017 வரையுள்ள நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை (ஞாயிற்றுக் கிழமை தவிர) திரும்ப பெறப்படும்.
விண்ணப்பங்கள் வாங்கப்பட்ட மாவட்டங்களிலேயே திரும்ப அளிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஒரு மாவட்டத்தில் விண்ணப்பம் பெறப்பட்டிருப்பினும் மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அளிக்கலாம். மேலும், 06.03.2017 முதல் 22.03.2017 வரை போதுமான கால அவகாசம் இருப்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்குமாறு தெரிவிக்கப்படுகிறது.