Speech Competitions for School and College Students: Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021–2022 – ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர் , தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பின்படி, 2021– ஆம் ஆண்டு நவம்பர்–14 – ஆம் நாள் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்துக் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுத்தொகைகள் வழங்கப்பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 12.11.2021 வெள்ளிகிழமை அன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன, இப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.3ஆயிரமும், மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரமும் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது.
இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரமும், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரமும் மற்றும் மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரமும் என வழங்கப்பட உள்ளது. இவை அல்லாமல் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகை ரூ.2,000 வீதம் வழங்கப்பெறவும் உள்ளது.
இப்போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு காலை 09.00 மணிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 01.00 மணிக்கும் நடைபெறவுள்ளது எனவும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவமாணவிகள் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெற வேண்டுமென தெரிவித்துள்ளார்.