பெரம்பலூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்தரம் வெயில் முடிய சற்று தினங்களே உள்ள நிலையில் இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் பலப்பகுதிகளில் பலத்து காற்றுடன் மழை பெய்தது.
பெரம்பலூர் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் ஆங்காங்கே சிறிய மரங்கள் சரிந்தன. மேலும், சில இடங்களில், கட்டிடங்களில் வைக்கப்பட்டிருந்த பதாகைள் விளம்பர தட்டிகள் வீழ்ந்தன. சில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின் துணைப்பு துண்டிக்கப்பட்டது. சரி செய்த பின்னர், மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.
பூலாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட கடம்பூர் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்து என்பவர், அவருக்கு சொந்தமான இரண்டு பசு மாடுகளை தென்னை மரத்தின் அடியில் கட்டியிருந்தார். இடி தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தன. இவற்றின் மதிப்பு சுமார் 60 ஆயிரம். இதே போன்று அதே ஊரை ராஜு என்ற விவசாயியும் அவருக்கு சொந்தமான பசுமாட்டை தொழுவத்திற்கு வெளியே கட்டியிருந்தார். இடி தாக்கியதில் அவரது மாடும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இது குறித்து அரும்பாவூர் போலீசார், மற்றும் வருவாய் துறையினர் நேரிடையாக சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.