Summer Art Training Camp on behalf of Jawahar Child Foundation of Namakkal
நாமக்கல் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் நிறைவு விழாவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் மூலம் நாமக்கல் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. நாமக்கல் கோட்டை நகராட்சி பள்ளியில் நடைபெற்ற கலைப் பயிற்சி முகாமில் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், கராத்தே, யோகா, கிராமிய நடனம், சிலம்பம், ஓவியம், கைவினைப்பொருள்கள் தயாரிப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
கடந்த 1ம் தேதி துவங்கிய இந்த பயிற்சி முகாம் நேற்று நிறைவு பெற்றது. இப்பயிற்சி முகாமில் 100க்கும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். கோடைக்கால பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு நாமக்கல் நாமக்கல் தமிழ்ச்சங்க தலைவர் டாக்டர் குழந்தைவேலு தலைமை வகித்து பயிற்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
நாமக்கல் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் தில்லை சிவக்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் கோட்டை நகராட்சி பள்ளி தலைமையாசிரியர் பழனிச்சாமி, பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் ரவி, வள்ளுவர் வாழ்வியல் மன்ற தலைவர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்.
இப்பயிற்சி முகாமில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூன்று மாணவ, மாணவிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை நாமக்கல் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்ற அலுவலர்கள் செய்திருந்தனர்.