The Collector of the Perambalur district government headquarters suddenly inspection

பெரம்பலூர் மாவட்டத்தில் மழைக் காலங்களில் பரவும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, மழைக்காலங்களில் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும், கொதிக்க வைத்த குடிநீரை பருக வேண்டும், வீட்டு உபயோகத்திற்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வுகள் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு வார்டுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து, டெங்கு வார்டிற்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளிடம் மருத்துவர்கள் உரிய நேரத்தில் சுழற்சி முறையில் வருகிறார்களா என்றும், நல்ல முறையில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றதா என்றும் கேட்டறிந்தார்.

மேலும், மருத்துவர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் டெங்குவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தி சிகிச்சையளிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். மேலும், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை கண்டறிய உதவும் செல் கவுன்டர் கருவிகளை பார்வையிட்டு, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களை கண்டறியும் முறை குறித்தும், ஒரு நாளைக்கு எத்தனை நோயாளிகளுக்கு செல் கவுன்டர் கருவி மூலமாக டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் இருப்பதை கண்டறிய முடியும் என்று மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து பிரசவ பிரிவிற்கு நேரடியாக சென்ற மாவட்ட ஆட்சியர் அங்குள்ள தாய்மார்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.

மேலும், மருத்துவமனைக்கு வருகை தரும் அனைத்து பொதுமக்களுக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மருத்துவர் செல்வராஜன், கண்காணிப்பாளர் தர்மலிங்கம், இருக்கை மருத்துவர் ராஜன், பொதுப்பணித் துறையின் உதவி பொறியாளர் கவிதா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!