The court ordered the postponement of Gokulraj murder case on December 25

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணையில், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சிசிடிவி பதிவுகளைப் பார்வையிட்ட திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 6 பேரை அடையாளம் காட்டி உறுதி செய்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பான விசாரணை, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி சாட்சிகளிடம் விசாரணை தொடங்கியது. கோகுல்ராஜ் தாய் சித்ரா, அண்ணன் கலைச்செல்வன், கோகுல்ராஜ் கல்லூரி தோழி சுவாதி, அவரது தாய் செல்வி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது கார் டிரைவர் அருண் உள்பட 15 பேர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். திருச்செங்கோடு கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன் கடந்த 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்த நிலையில், மீண்டும் ஆஜரானார்.
அப்போது கோகுல்ராஜை திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக் கோயிலில் இருந்து சிலர் அழைத்துச் செல்வது போன்ற சிசிடிவி பதிவுகள் அவருக்கு போட்டுக் காட்டப்பட்டது. அந்தப் பதிவுகளில் இருப்பவர்கள் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யுவராஜ், அவருடைய கார் டிரைவர் அருண், ரவி என்ற ஸ்ரீதர், சுரேஷ், ரஞ்சித், சிவக்குமார் ஆகிய 6 பேர் என்பதை அடையாளம் காட்டினார்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார். அன்று யுவராஜ் தரப்பு வக்கீல், கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நடத்த வாய்ப்புள்ளது என தெரிகிறது.