The public should give full cooperation to prevent the spread of dengue fever: Perambalur Collector
பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கொசுமருந்து அடித்தல், நீர்த் தேக்கத் தொட்டிகளிலும், வீடுகளில் நீர் நிரப்பி வைத்துள்ள பாத்திரங்களிலும் பிளீச்சிங்க பவுடர் போடுதல், யாருக்கேனும் காய்ச்சல் உள்ளதா என கேட்டறிந்து நடவடிக்கை எடுத்தல் என்பன போன்று பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக இன்று பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு மற்றும் பெரம்பலூர் ஒன்றியத்திற்குட்பட்ட களரம்பட்டி கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் இரா.தமிழ்ச்செல்வன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நேரில் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ள பகுதிகளாக 74 பகுதிகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதனடிப்படையில் மேற்கண்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக மாவட்டத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து, போர்க்கால அடிப்படையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாவட்ட ஆட்சியர் தினந்தோறும் மாவட்டத்தின் நகராட்சி மற்றும் கிராமப் பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். இன்றைய ஆய்வின்போது நகராட்சி 4வது வார்டு பகுதியில் வீடு,வீடாகச்சென்று பொதுமக்களிடம் டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி தண்ணீரை மூடிப் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும், நீர் தேங்காத வகையில் சுற்றுப்புறத்தையும், மொட்டைமாடியையும் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அறிவுறை வழங்கினர்.
மேலும், தங்கள் வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டி மற்றும் பாத்திரங்களை 3 நாட்களுக்கு ஒருமுறை பிளிச்சிங் பவுடா; கொண்டு நன்றாக தேய்த்து சுத்தம் செய்து உலரவைத்து பிறகு தண்ணீரை நிரப்ப வேண்டும். வீடுகளின் அருகில் உடைந்த மண்பாண்டங்கள், உரல், டயா;, தேங்காய் மட்டைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி அவைகளில் மழை நீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகாமல் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
டெங்குவை ஒழிப்பதில் பொதுமக்களின் பங்கும் மிகவும் முக்கியமானதாகும் எனவே, டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வின்போது திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சம்பத், கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மரு.அரவிந்தன், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர் முரளி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.