Tomco Loan Scheme: Minorities can apply for a loan – Collector’s notice

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாட்டில் சிறுபான்மையினர்களாகக் கருதப்படும் இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின் மற்றும் பார்சியர்கள் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் தனி நபர் கடன், கல்வி கடன், கறவை மாடு கடன் உதவி, ஆட்டோ கடன், சிறு கடன் போன்ற பல்வேறு கடன் உதவித் திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றது.
இக்கழகம் தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழகத்துடன் இணைந்து வியாபாரம், தொழில் தொடங்கிடவும் மற்றும் ஏற்கனவே செய்துவரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கும் தனி நபர் கடன் திட்டும், சிறுபான்மையினர் மாணவ – மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை – முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நுட்ப கல்வி மற்றும் குறுகிய கால உயர்திறன் வளர்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு கல்வி கடன் திட்டம், கறவை மாடு வாங்கிட ஆவின் நிறுவனத்தின் மூலமாக கறவை மாடு கடன் உதவி திட்டம், ஆட்டோ கடன் திட்டத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு சுய தொழில் தொடங்கிட தொழில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ வழங்கப்படுகிறது.
இக்கடன் தனிநபர் கடன் விதிமுறைகளின் அடிப்படையில் தாய்கோ வங்கி மூலம் வழங்கப்படுகிறது. சிறுகடன் திட்டம் திட்டத்தின் கீழ் சிறுபான்மையின மக்கள் சுய உதவிக்குழுக்களை அமைத்து தனித்தனியாகவோ அல்லது சேர்ந்து சிறுவியாபாரம், சிறுதொழில் செய்து தங்களது வருமானத்தை பெருக்கி வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் ஆண்டிற்கு 6 சதவீதம் என்ற குறைந்த வட்டியில் சிறுகடன் ஒரு நபருக்கு ரூ.50 ஆயிரத்திற்கு மிகாமல் வழங்கும் சிறப்பு மிகு திட்டம் டாம்கோ கழகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களின் மூலம் கடன் உதவி பெற விண்ணப்பதாரரின் பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் நகர்புறத்தில் வசிப்பவராக இருப்பின் ரூ.1,03,000- மேற்படாமலும், கிராமப்புறத்தில் வசிப்பவராக இருப்பின் ரூ.81,000- மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயது நிறைவு செய்தவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும். விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பம் கூட்டுறவு வங்கியின் விதிகளுக்குட்பட்டு பரிசீலிக்கப்பட்டு உரிய பரிந்துரையுடன் டாம்கோவால் பெறப்பட்டு ஒப்பளிக்கப்பட்டு கடன் தொகையை சம்பந்தப்பட்ட வங்கி மூலமாக வழங்கப்படும்.
மேலும் நபர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.20,00,000- (இருபது இலட்சம்) கடன் உதவி வழங்கப்படும். ரூ.5,00,000 மேல் வழங்கப்படும் கடன் தொகையில் முதலில் 50 சதவீதம் கடன் வழங்கப்பட்டு, மீதமுள்ள 50 சதவீத கடன் தொகை முன்பு வழங்கப்பட்ட கடன் தொகை முழுமையாக உபயோகப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்த பின் விடுவிக்கப்படும்.
கடன் தொகையை வட்டியுடன் அதிக பட்சம் 60 மாத சம தவணைகளில் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு உரிய தேதியில் செலுத்தி விட வேண்டும். அபராத வட்டி கடன் தவணை தொகையை செலுத்தத் தவறினால் 5 சதவீத அபராத வட்டி பயனாளியிடமிருந்து வசூலிக்கப்படும்.
மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெற ஆதார் அட்டை நகல், சாதிச்சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல், வருமானச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று நகல், கடன் பெறுவதற்கான தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதாக இருந்தால் மட்டும்) நகல், கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களுடன், கடன் விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகங்கள், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றிலிருந்து இலவசமாகப் பெற்று, விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுலவகத்தில் சமர்ப்பிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497