Tomorrow, a special camp for farmers, housing Patta related issues: Perambalur Collector!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வருவாய்த்துறை அமைச்சர் 31.08.2021 அன்று சட்டப்பேரவையில் “விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அரசின் சேவைகளை பொதுமக்களின் இருப்பிடங்களுக்கே கொண்டு செல்லும், அரசின் கொள்கையின் ஒரு அங்கமாக ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். அனைத்து வருவாய் வட்டத்திலும் முகாம்கள் நடத்தப்பட்டு 2022 பொங்கல் திருநாளுக்குள் அனைத்து கிராம மக்களும் பயன்பெற வழிவகை செய்யப்படும்“ என்ற அறிவிப்பிற்கிணங்க சிறப்பு முகாம்கள் நடத்திட அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு முகாமில் நில அளவை (புல) எண்கள்/உட்பிரிவு எண்கள் தவறாக பதிவு செய்யப்பட்டுள்ள இனங்கள், பட்டாதாரர் பெயர் அல்லது தகப்பனார் / காப்பாளர் பெயரில் எழுத்துப்பிழை திருத்தம், உறவு நிலை குறித்த திருத்தம், மேற்குறிப்பிட்ட சில கலங்கள் பதிவுகளின்றி (வெற்றாக) இருக்கும் இனங்கள், ஒரு பட்டாதாரரின் பரப்பு / பெயர் பக்கத்து நிலத்தின் பட்டாதாரரின் விவரங்களுடன் (ஒன்றின் இடத்தில் மற்றொன்று மாறியிருக்கும் இனங்கள்) குறித்த மனுக்கள் மற்றும் இதர கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இணையவழி தமிழ்நிலம் மென்பொருள் பதிவுகளில் ஏற்பட்ட எளிய பிழைகளை திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்கள் 12.11.2021 அன்று பெரம்பலூர் வட்டத்தில் எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு எளம்பலூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், வேப்பந்தட்டை வட்டத்தில், மலையாளப்பட்டி, அரும்பாவூர் கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு அரும்பாவூர் கிராம நிருவாக அலுவலர் அலுவலகத்திலும், குன்னம் வட்டத்தில ஒகளுர் (கி), ஒகளுர்(மே), சு.ஆடுதுறை கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு சு.ஆடுதுறை ராஜிவ்காந்தி சேவாகேந்திரியா மையத்திலும், ஆலத்தூர் வடடம், நாட்டார்மங்கலம், மாவிலங்கை, செட்டிக்குளம் கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு செட்டிக்குளம் ஆத்திநாட்டார் அன்னதான மண்டபத்திலும் இம்முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த சிறப்பு முகாமினை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதில், தெரிவித்துள்ளார்.