Two girls who went missing near Perambalur floated dead in the water!
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே உள்ள திருவளக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்(30), சுகன்யா(27), தம்பதியினர். கல்லுடைக்கும் கூலித்தொழிலாளிகளான இவர்களுக்கு மகாலட்சுமி(6), ஜெயஸ்ரீ(4), என இரண்டு மகள் உள்ளனர். இதனிடையே மூன்று மாதம் கர்ப்பமாக உள்ள சுகன்யா மாதாந்திர பரிசோதனை மேற்கொள்ள பாடாலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று விட்டார். சுரேஷ் வழக்கம் போல் கூலி வேலைக்கு சென்ற நிலையில் மகள் இருவரையும் பக்கத்து வீட்டு பாட்டியின் பாதுகாப்பில் விட்டுச் சென்று விட்டு நேற்று மாலை வீட்டிற்கு சென்று பார்த்த போது மகள்கள் இருவரும் காணாமல் போனது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ்-சுகன்யா தம்பதியினர் உறவினர்கள் உள்ளிட்ட அப்பகுதி பொது மக்கள் உதவியுடன் மகள்கள் இருவரையும் தேடி வந்தனர். இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள ஒரு குட்டையில் மகாலட்சுமியும், ஜெயஸ்ரீயும் சடலமாக மிதந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சிறுமிகளின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சகோதரிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தார் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.