பெரம்பலூர் அருகே, சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக நெடுஞ்சாலை துறை மூலம் ரூ.1.24 கோடி மதிப்பீட்டில் 1.20 கி.மீ. நீளமுள்ள சாலை தமிழக அரசின் நிதி மூலம் சீரமைக்கப்பட்டு வருகின்றது. மேலும் இச்சாலையில் மூன்று இடங்களில் சேதமடைந்த பழைய கல்பாலங்களுக்கு பதிலாக புதிய பாலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
இச்சாலையில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளை நேற்று பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா, சிறந்த ஆன்மீக தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் விளங்கும் சிறுவாச்சூருக்கு வருகை தரும் பொதுமக்களின் நலன் கருதி நெடுஞ்சாலை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு பணிகளை உயர்ந்த தரத்துடன், விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், சாலை ஓரங்களில் பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டு வரும் பேவர் பிளாக் பதிக்கும் பணிகளையும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், உள்ளிட்ட அரசு பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.