World AIDS Day: Awareness rally: DRO inaugurated in Perambalur.
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர், பாலக்கரை பகுதியில் கையெழுத்து இயக்க பிரச்சாரத்தையும், விழிப்புணர்வு பேரணியினையும் மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆண்டுதோறும் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு தலைப்புகளில் நடத்தப்படும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 2022-ம் ஆண்டு “சமப்படுத்துதல்” என்ற தலைப்பில் அனுசரிக்கப்படவுள்ளது. அதாவது எச்.ஐ.வி நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தாம் அறிந்த தகவல்களை தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவித்தல், தன்னார்வமாக இரத்த பரிசோதனை செய்து கொள்ளுதல், எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் தொற்றுள்ளோரை ஒதுக்காமல் அவர்களையும் சகமனிதர்களாக அரவணைப்போம், அவர்களுக்கும் சம உரிமை கொடுப்போம் என்பன உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது.
இந்த கருத்துக்களை பொதுமக்களிடையே தெரிவிக்கும் வகையில் பதாகைகள் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் இன்று நடைபெற்ற பேரணியில் 100-க்கும் மேற்பட்ட நர்சிங் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரிகளின் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியானது பாலக்கரையில் தொடங்கி, சங்குப்பேட்டை வழியாக பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணி துவங்கும் முன்பு அனைவரும் மேற்சொன்ன பொருண்மைகள் தொடர்பாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்டம், அலுவலர் கருப்பசாமி, அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் அர்ஜுனன், ஏ.ஆர்.டி மருத்துவ அலுவலர் மணிகண்டன், மாவட்ட திட்ட மேலாளர் சுமதி, உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.