பெரம்பலூர் : பெரம்பலூர், துறைமங்கலத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் மண்டல அளவிலான சி.ஐ.டி.யு சிறப்பு பேரவைக் கூட்டம் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
சி.ஐ.டி.யு பெரம்பலூர் மாவட்ட செயலர் ஆர். அழகர்சாமி தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் ஆர். சிற்றம்பலம், கைத்தறி சங்க மாவட்ட செயலர் எஸ்.என். துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணை பொதுச்செயலர் வி. குமார் பேசியது:
ஒப்பந்த முறையை முற்றிலும் ஒழிப்பதோடு, மதவாத தீய சக்திகளை கட்டுப்படுத்த வேண்டும். அமைப்பு ரீதியாக ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்.
உற்பத்தி பிரிவில் ஒப்பந்த தொழிலாளர்களையோ, தொழில் பயிற்றுநர்களையோ ஈடுபடுத்தக்கூடாது என்ற சட்டம் ஏட்டளவில் உள்ளது. மருத்துவம், வைப்பு நிதி ஆகியவற்றை முறைப்படுத்துவதோடு, பொதுத் துறையை பாதுகாக்க வேண்டும்.
மேலும், தொழிற்சங்க அரங்கில் கொண்டு வரும் கோரிக்கைகளையும், அதில் வெற்றியடைய கடமை உணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
கூட்டத்தில், மின் ஊழியர் மத்திய அமைப்பு வட்ட செயலர் எஸ். அகஸ்டின், புதுக்கோட்டை மாவட்ட செயலர் செல்வராஜ், திருச்சி கே.சி. பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.