பெரம்பலூர் அருகே, வரதட்சிணை கொடுமையால் புதுப்பெண் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

பெரம்பலூர் அருகேயுள்ள சித்தளி கிராமத்தை சேர்ந்த சண்முகத்துக்கும் (23), கல்பாடி கிராமத்தை சேர்ந்த அண்ணாதுரை மகள் ராதிகாவுக்கும் (18), கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், திருமணம் முடிந்த நாளிலிருந்து ராதிகாவிடம் வரதட்சிணை கேட்டு சண்முகம் கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அவரது வீட்டில் இன்று காலை ராதிகா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிகிறது. தகவலறிந்த மருவத்தூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, இறந்தவரின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, அவரது தாய் மலர்கொடி (41), தனது மகளின் சாவில் சந்தேகம் உள்ளதாக கொடுத்த புகாரின்பேரில், மருவத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், திருமணமாகி 45 நாள்களுக்குள் புதுப்பெண் தற்கொலை செய்துகொண்டதால், வரதட்சிணை கொடுமையால் உயிரிழந்தாரா என, வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!