Demonstration in Jactto-Geo Namakkal to cancel a new pension scheme
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1.4.2003-க்கு பின்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.அனைத்து ஆசிரியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4 ம் தேதி முதல் மாநிலம் தழுவிய அளவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பை தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனைத்தொடர்ந்து திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ நாமக்கல் மாவட்ட கிளை சார்பில் நாமக்கல் பார்க் ரோட்டில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜெகதீசன் தலைமை வகித்தார். ராஜேந்திர பிரசாத் வரவேற்றார். ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் ராமு, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். இதில் தமிழ்நாடு ஆரம்ப ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலாளர் மாதேஸ், அரசுப் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் தமிழ்மணி மற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.