பெரம்பலூர் : வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்ச்சி இன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி தலைமையில் நடைபெற்றது.
வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தல் 2016-ஐ முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி பல்வேறு நடவடிக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
குறிப்பாக கடந்த தேர்தல்களில் குறைவாக வாக்குப்பதிவு செய்யப்பட்ட பகுதிகளில் கூடுதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது.
கல்லூரி மாணவ, மாணவிகளை கொண்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணிகளும்,
செய்தி மக்கள் தொடர்பு துறையின் மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்த வீடியோ படக்காட்சிகளும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தேர்தல் விழிப்புணர்வு சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகிறது.
வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கும் வகையிலும், வாக்கை விலைக்கு விற்கக்கூடாது, வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை, வாக்களிப்பது பொறுப்புள்ள குடிமகனின் கடமை,
தேர்தல் நாள் மே16, 100 சதவீதம் வாக்களிக்கத் தயாராவோம் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஒட்டுவில்லைகளை பெரம்பலூர் மாவட்ட புதிய பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளிலும்,
ஆட்டோக்களிலும், அனைத்து வீடுகளுக்கும் செல்லும் பொருளாக உள்ள கேஸ் சிலிண்டர்களிலும் மற்றும் தண்ணீர் கேன்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர் ச.மீனாட்சி மற்றும்
தேர்தல் நடத்தும் அலுவலர்களான பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, மாவட்ட வழங்கல் அலுவலர் கள்ளபிரான் ஆகியோர் ஒட்டினர்.
மேலும் பேருந்துநிலையத்தில் கூடியிருந்த பொதுமக்களிடம் வழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அறிவழகன், உள்ளிட்ட அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.