பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று அங்கன்வாடி மற்றும் அரசு ஊழியர்கள் முன்றாம் நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள பாலக்கரை பகுதியில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊதிய மாற்றம், இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். தினக்கூலி, அவுட்சோர்சிங் கான்ட்ராக்ட் முறையை கைவிட வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அனைத்து படிகளையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கம், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம், கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம், நெடுஞ்சாலை சாலைப் பணியாளர்கள் சங்கம், மருத்துவத் துறை, சமூக நலத்துறை, மருந்தாளுநர் சங்கம், சத்துணவு பணியாளர்கள் சங்கம், அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் என 9 சங்கத்தினர் பிப். 10 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில், இச்சங்கங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், சத்துணவு மையம் உள்பட பல அலுவலகங்களில் அலுவலர்கள் பணியில் இல்லாததால் வெறிச்சோடி கிடந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே அங்கன்வாடி மற்றும் அரசு பணியாளர்கள் சாலை மறியல் செய்தனர். 634 பெண்கள் உள்பட 764 பணியாளர்களை காவல் துறையினர் கைது செய்தனர். போக்குவரத்து சற்றும் பாதிப்புடைந்தது. காவல் துறையினர் சீர்செய்தனர்.