பெரம்பலூர் அருகே குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டணையை விதித்து பெரம்பலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சேலம் மாவட்டம், வேப்படிபாலக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி(27), இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் தொண்டைமாந்துறை அருகே உள்ள விஜயபுரம் கிராமத்தை சேர்ந்த கொளஞ்சி மகள் விஜயலட்சுமி (21), என்பவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்தது.
இவர்களுக்கு மோகித் என்ற ஒன்பது மாத ஆண் குழந்தை இருந்த நிலையில், ராமசாமி வேலைக்காக வெளிநாடு சென்று விட்டதால், தழுதாழை கிராமத்தில் உள்ள தனது பாட்டி பச்சையம்மாள் வீட்டில் விஜயலட்சுமி வசித்து வந்தார்.
இதன் பின்னர், கணவன் மனைவிக்கும் இடையே குடும்பத்தகராறு அடிக்கடி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த விஜயலட்சுமி திருமணம் செய்து கொள்ளாமல் படித்து இருக்கலாம் என்றும்,
மன உளச்சலில் உள்ள தனக்கு குழந்தை இடையூராக இருந்ததாகவும், கடந்த 2015ம் ஆண்டு மே 30ம் தேதி இரவு தூங்கி கொண்டிருந்த குழந்தை மோகித்தை சுமார் 10.30 மணியளவில் தூக்கி சென்று அவர் வசித்த பகுதியில் சிவப்பிரகாசம் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் வீசி கொலை செய்தார்.
இதுகுறித்து அரும்பாவூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்கு பதிந்து, பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி நஷிமாபானு, குற்றவாளி விஜயலட்சுமிக்கு ஆயுள் தண்டணையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஆறு மாத காலம் சிறை தண்டணையும் விதித்து இன்று தீர்ப்பளித்தார்.
இதனைத்தொடர்ந்து விஜயலட்சுமியை திருச்சி மத்திய பெண்கள் சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.