Perambalur: 2 youths die after being electrocuted while trying to catch fish!
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள தொண்டமாந்துறை கிராமத்தின் வழியாக கல்லாறு பாய்ந்து ஓடுகிறது.
தற்போது கோடைக் காலம் என்பதால் இந்த ஆற்றில் தண்ணீர் வரத்து இல்லாமல், ஆங்காங்கே தண்ணீர் அதிக அளவில் தேங்கி பெரும் குட்டை குட்டையாக உள்ளது. இந்த தண்ணீரில் அதிக அளவில் மீன்கள் உள்ளது. இந்த மீன்களை பிடிப்பதற்கு அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் இரவு நேரங்களில் ஆற்று தண்ணீரில் மின்சாரத்தை செலுத்தி மீன் பிடித்து வருவதாக கூறப்படுகிறது.அவ்வாறு மின்சாரத்தை தண்ணீருக்குள் செலுத்தும் போது தண்ணீருக்குள் இருக்கும் மீன்கள் மின்சாரம் பாய்ந்து மயங்கிய நிலையில் தண்ணீருக்கு மேலே மிதக்கும், அந்த மீன்களை பிடித்து எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கல்லாற்றில் இன்று அதிகாலை தொண்டமாந்துறையை சேர்ந்த சேகர் மகன் தினேஷ் குமார் ( 28) கணேசன் மகன் ரஞ்சித் (25) இருவரும் கல்லாற்றில் மின்சாரத்தை செலுத்தி மீன் பிடிக்க சென்று உள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் செலுத்தப்பட்டுள்ள தண்ணீரில் இருவரும் வழுக்கி விழுந்துள்ளனர். இதனால் ஆற்று தண்ணீரில் இருந்த அளவுக்கு அதிகமான மின்சாரம் தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
காலையில் அந்த பகுதியில் சென்றவர்கள் பார்த்த போது, இருவரும் உயிரிழந்து ஆற்றில் கிடப்பதை கண்டு அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அரும்பாவூர் போலீசார் இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவுப் செய்த போலீசார் இரு வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் பிடிக்கும் ஆசையில் மின்சாரத்தை ஆற்றுத் தண்ணீரில் பாய்ச்சி மீன் பிடிக்க சென்ற இரண்டு வாலிபர்கள் அதே மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இன்று காலை அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.