பெரம்பலூரில் மாவட்ட அதிமுக சார்பில் கட்சித் தொண்டர்கள் முதலமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 7 ஆம் தேதி முதல் வரும் 28 ஆம் தேதி வரை கோவில்களில் சிறப்பு பூஜை, பொதுக்கூட்டம், அன்னதானம், மாணவர்களுக்கு எழுது பொருட்கள், சட்ட ஆலோசனைகள், மருத்துவ முகாம்கள், பால் குடம் எடுத்தல் போன்றவற்றை செய்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாளை இன்று பெரம்பலூர் மாவட்டம் முழுவதும், கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று காலை அதிமுக தொண்டர்கள் புடை சூழ மாவட்ட செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், எம்.ஜி.ஆர்., அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மாரியாதை செலுத்தினர். பின்னர், 68 கிலோ எடை அளவில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கேக்கை வெட்டி முதலமைச்சரின் பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.
பின்னர். பொதுமக்களுக்கு, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி கொண்டனர்.
அக்கட்சி தொண்டர்கள் பாத யாத்திரையாக புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கடைவீதி அருகே உள்ள சிவன் கோவில் வரை நடந்து சென்று சிவன் கோவிலில் வழிபாடு நடத்தினர்.
பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் இன்று பிறந்த நான்கு பெண் குழந்தைகளுக்கு எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிகழச்சியில் பெரம்பலூர் ச.ம.உ இரா.தமிழ்ச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளார் ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் கர்ணன், வேப்பந்தட்டை சிவப்பிரகாசம், வேப்பந்தட்டை முன்னாள் ஒன்றிய செயலாளர் கண்ணுசாமி, குரும்பாபாளையம் நாகராஜன், கோனேரிப் பாளையம் மனோகர், மகளிர் அணியினர் உள்பட அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதே போன்று மாவட்டத்தில் உள்ளள ஒன்றியம், நகரம், பேரூர், கிளைக்கழக தொண்டர்கள் அதிமுக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கியும். நலத்திட்ட உதவிகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.