Perambalur: Chithirai Pournami festival at Siruvachur Sri Madhurakali Amman Temple: 2 days long!
பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் ஸ்ரீமதுரகாளிஅம்மன் கோவிலில் சித்திரைபவுர்ணமி விழா நாளை தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது: பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூரில் உள்ள ஆதிசங்கரர் வழிபட்ட பெருமைபெற்ற ஸ்ரீமதுரகாளிஅம்மன் கோவிலில் சென்னை கோட்டூர் ஸ்ரீமகாமேரு மண்டலி சார்பில் 16-வது சித்திரை பவுர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1.30 மணிவரை அகண்ட ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை மற்றும் ஸ்ரீசாகம்பரி குங்கும அர்ச்சனையுடன் கூட்டு வழிபாடு நடக்கிறது. அன்றைய தினம் மாலை 3மணிமுதல் இரவு 8 மணிவரை நவாவரண பூஜை நடக்கிறது.
ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம-ஸ்ரீசாகம்பரி குங்கும அர்ச்சனை மற்றும் ஸ்ரீசண்டி மஞ்சரி மகாஹோமத்தை ஸ்ரீபரிபூர்ணாம்பா சமேத ஸ்ரீமதுராம்பிகாநந்த ப்ரஹ்மேந்திர சரஸ்வதி அவதூத சுவாமிகள் தொடங்கி வைக்கிறார். இதில் பல நூற்றுக்கணக்கான சுமங்கலிப் பெண்கள் கலந்து கொண்டு பாராயணத்துடன் குங்கும அர்ச்சனை செய்து கூட்டுவழிபாடு நடத்துகின்றனர்.
சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், பருவமழை தவறாமல் பெய்து தனதானியம் பெருகிடவும், பொதுமக்கள் நோய்களில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழவும் வேண்டி ஸ்ரீசண்டி பாராயணமும், ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமமும் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) காலை 6.30 மணிமுதல் பகல் 11.30 மணிவரை நடக்கிறது. இதனைத் தொடர்ந்து. பகல் 12 மணி முதல் மதுர காளி அம்மனுக்கு அபிசேகங்களும், மகாதீபஆராதனையும் நடக்கிறது.இதனை ஒட்டி யாகசாலை முன்பு கும்பகலசங்கள் வைக்கப்பட்டு, கும்பபூஜைகள் நடைபெறுகிறது, இதில் மகாமேரூ மண்டலியின் ஆன்மீக மெய்யன்பர்கள் பக்தர்கள் குழுவினர் கலந்து கொண்டு கும்ப பூஜைகளையும், சிவாச்சாரியார்கள் ஸ்ரீசண்டி மஞ்சரி மகா ஹோமத்தையும் நடத்தி வைக்கின்றனர்.