Perambalur: Collector inspects Government Headquarters Hospital!

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, இரத்த வங்கி, ஸ்கேன் அறை, கர்பிணி தாய்மார்கள் அறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கலெக்டர் ஷரண்யா பார்வையிட்டார். விபத்து மற்றும் அவசர மருத்துவ முன்னெடுப்பு மையத்தினை பார்வையிட்டார். மேலும், மருத்துவமனையில் உட்புற நோயாளியாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு போதிய படுக்கை வசதிகள் உள்ளதா என்றும், வெளிப்புற நோயாளிகள் அமருவதற்கு போதிய இருக்கைகள் உள்ளதா என்றும் பார்வையிட்ட கலெக்டர், அங்கிருந்த கர்ப்பிணி தாய்மார்களிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை, ஊட்டச்சத்து பெட்கம், மருந்து மாத்திரை முறைகள் திருப்திகரமாக வழங்கப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார்.
பின்னர், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை, படுக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக உள்ளதா என்பதை ஆய்வு செய்தார். தொடர்ந்து, முதலமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சைபெறுவோர், மகப்பேறு பிரிவு, சிசு தீவிர சிகிச்சை பிரிவு, மாவட்ட மனநல ஆலோசனை பிரிவு, காது, மூக்கு தொண்டை பிரிவு, இரத்த சுத்திகரிப்பு பிரிவு, யோகா மற்றும் இயற்கை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சை முறைகளை பார்வையிட்டார். மகப்பேறு திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கிடவும், குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்கு தாய்க்கு தேவையான பேறுகால ஊட்டச்சத்து உணவு, மருத்துவம் மருந்து பொருட்களை வழங்கிடவும், இரத்த சுத்திகரிப்பு செய்திட வரும் நபர்களுக்கு தரமான சிகிச்சை வழங்கிடவும், தொடர்புடைய மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார். மேலும், மருத்துவமனை வளாகத்தை எப்போதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, நகராட்சியில் ரோவர் ஆர்சிலிருந்து துறைமங்கலம் பிரதான சாலையில் கழிவு நீர் வெளியேற்றத்திற்கு செல்லும் சிமெண்ட் குழாய் ஸ்டேட் வங்கி அருகில் உடைந்ததுள்ளாதல் நகரின் மேற்கு பகுதியில் இருக்கும் கழிவுநீர் சேகரிக்கும் சிமெண்ட் குழாயை அகற்றி விட்டு ஸ்டேட் வங்கி பகுதியில் உள்ள தார் சாலையில் ரூ.13.80 லட்சம் மதிப்பீட்டில் 48 மீட்டருக்கு அதிகம் தாங்கும் திறன் கொண்ட புதிய இரும்பு குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை கலெக்டர் ஷரண்யா, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் கி.சிவக்குமார் முன்னிலையில் பார்வையிட்டார்.
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மதியழகன், நகராட்சி ஆணையர் (பொ) தகண்ணன், உதவி செயற்பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் சரவணன் மருத்துவமனையின் இருக்கை மருத்துவர் என்.ராஜா, பெரம்பலூர் வட்டாட்சியர் பழனி செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497