Perambalur: Collector issues work orders to heirs of those who died due to violence!
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் மற்றும் கைகளத்தூர் கிராமத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த 2 குடும்பங்களின் வாரிசுதாரர்களுக்கு அரசு பணிக்கான ஆணைகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு பணிக்கான ஆணையின் கீழ் கைகளத்தூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் 17.01.2025 அன்று வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து விட்டதால், வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989 மற்றும் திருத்தச் சட்டம் 2015 விதிகள் 1995 மற்றும் திருத்த விதிகள் 2016 விதி 12 (4)ன் படி அவரது மனைவி மீனாவிற்கு மாவட்ட வேளாண்மைத்துறை அலுவலகத்தில் அலுவலக உதவியாளருக்கான பணி நியமன ஆணையினையும், அரும்பாவூரைச் சேர்ந்த மோகன்குமார் என்பவர் கடந்த 22.08.2024 அன்று வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்து விட்டதால் அவரது சகோதரரும் வாரிசுதாரருமான பிரபாகரனுக்கு வருவாய்த் துறையில் அலுவலக உதவியாளருக்கான பணி நியமன ஆணைகளையும் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார். அரசுஅலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.