Perambalur: Desilting work worth Rs. 2 crore 11 lakhs under special desilting project; Collector informs!
பெரம்பலூர் மற்றும் குன்னம் வட்டத்திற்கு உட்பட்ட, குரும்பலூர், வடக்கலூர், அத்தியூர், கீழப்பெரம்பலூர் கிராமத்தில், நீர்வளத்துறையின் சார்பில் சிறப்பு தூர்வாரும் பணியின் கீழ் நடைபெற்று வரும் ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் தூர் வாரும் பணிகளை கலெக்டர் கிரேஸ் பச்சாவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகளும் 33 அணைக்கட்டுகளும் மற்றும் 5 ஆறுகளும் உள்ளன. கடந்த 6.03.2025 அன்று தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அரசாணை 2டி இன் படி, காவேரி டெல்டா மாவட்டங்களில், சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் பாசன அமைப்புகள் ஆதாரங்களை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அவ்வாறாக பெரம்பலூர் மாவட்டத்தில் ஆறுகள், வரத்து வாய்க்கால்கள், பாசன வாய்க்கால்கள், உபரி நீர் வாய்க்கால்கள், ஓடை மற்றும் வடிகால்கள் முட்புதர்கள் மண்டியும், தூர்ந்தும் உள்ள பகுதிகளில் சிறப்பு தூர்வாரும் பணிகளின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 15 பணிகளின் மூலமாக ரூபாய் 211 லட்சம் மதிப்பீட்டில் 39.50 கி.மீ தூரத்தில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளில் பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட குரும்பலூர் கோனேரி ஆற்றில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2,000 மீட்டர் நீளம் தூர் வாரும் பணி நடைபெற்று வருவதையும், குன்னம் வட்டத்திற்குட்பட்ட வடக்கலூர் அக்ரஹாரம் ஏரியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில், 4,000 மீட்டர் நீளம் வரத்து வாய்க்கால் தூர் வாருதல் பணி நடைபெற்று வருவதையும், கீழக்குடிக்காடு கிராமத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அத்தியூர் ஏரி வரத்து வாய்க்கால் 5,500 மீட்டர் நீளம் வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருவதையும் கீழப்பெரம்பலூர் கிராமத்தில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் 1,000 மீட்டர் நீளம் நரி ஓடையில் தூர் வாரும் பணி நடைபெற்று வருவதையும் நேரில் ஆய்வு செய்தார்.
சிறப்பு தூர்வாரும் பணியின் கீழ் நடைபெறும் பணிகளில், வாய்க்கால் முழுவதும் முட்புதர்கள் அகற்றி, பக்கரைகளை வலுப்படுத்தி, பணிகளை சிறப்புடன் மேற்கொள்ள நீர்வளத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது மேலும் இப்பணிகளால் வாய்க்கால் ஓரங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப்படும். நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் திறன் அதிகரிக்கப்படும் இதனால் இப்பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள விவசாய உற்பத்தி பொருள்கள் அதிகரிக்க ஏதுவாகவும் இச்சிறப்பு தூர்வாரும் பணி இருக்கும். இப்பணிகளை குறித்த காலத்திற்குள் திட்ட மதிப்பீட்டில் உள்ளவாறு தரமாகவும், விரைவாகவும், மேற்கொள்ள நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வருவாய் மற்றும் நீர்வளத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.