Perambalur: Gram Sabha meeting on the occasion of Labor Day; Collector’s information!
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு 01.05.2025 அன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. கிராம சபைக் கூட்டத்தில் அனைத்து கிராம சபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நலத்திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும்.
மேலும், கிராம சபைக்கூட்டத்தில் கிராம ஊராட்சி மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுய சான்றினை அடிப்படையாக கொண்டு கட்டிட அனுமதி பெறுதல் குறித்தும், வரி மற்றும் வரியில்லா வருவாய் இனங்களை இணைவழி செலுத்துவதை உறுதிப்படுத்துதல் மற்றும் இதர கூட்டப் பொருட்கள் பற்றி விவாதிக்க வேண்டும்.
தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராம சபா உறுப்பினர்கள் (கிராம ஊராட்சி வாக்காளர்கள்) அனைவரும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறை தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் கூறிட வேண்டும்.
கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சிக்கும் பற்றாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 01.05.2025 அன்று கிராம சபைக்கூட்டத்தில் கிராம சபா உறுப்பினர்களாகிய வாக்காளர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியில் இதர பொருட்கள் குறித்து விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.