Perambalur: Heavy rain with strong winds. Tree falls on auto; traffic affected!

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மதியம் லேசான இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் பெய்த திடீர் கோடை மழையினால் குளிர்ச்சியான சூழல் நிலவியதை தொடர்ந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மழைக்கு முன்பாக வீசிய பலத்த காற்றின் போது பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் ஒன்று சாலை நடுவே விழுந்ததால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 100° ஃபாரன்ஹீட்டிற்கு மேல் வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இதனால் பகல் நேரங்களில் வயதானவர்கள், பெண்கள் மற்றும்  குழந்தைகள் என பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் இன்று மதியம் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு சிறிது நேரத்தில் பெரம்பலூர் நகர், சிறுவாச்சூர், கவுல்பாளையம், பேரளி, குன்னம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. மேலும் மாவட்டத்தின் சில இடங்களில் திடீரென பலத்த காற்று வீசியதில், பெரம்பலூர் தீரன் நகர் பகுதியில் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புளியமரம் ஒன்று ஷேர் ஆட்டோ மீது சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. அதில் டாட்டா மேஜிக் ஆட்டோ சேதமடைந்ததுடன் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலை சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த பெரம்பலூர் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மரத்தை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து போக்குவரத்து சீரானது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கோடை மழையினால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!