Perambalur: Minister N. Anand held a review meeting with officials regarding the Rural Development and Water Resources Departments.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், பெரம்பலூரில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வுக் கூட்டத்தை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தினார்.
இதில், 2025-26ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி கிராமப்புற வீடுகள் திட்டத்தின் கீழ் நிலுவையிலுள்ள வீடுகளின் கட்டுமான முன்னேற்றம், கிராமப்புற சாலை மற்றும் பாலப் பணிகள், விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாத இயக்கம் திட்டத்தின் கீழ் வேலைநாட்கள் உருவாக்கம், தினசரி வருகைப் பதிவு மற்றும் பசுமை ஊரகம் – கட்டம் II திட்டத்தின் கீழ் நாற்றுப் பண்ணைகள் அமைத்தல் மற்றும் மரக்கன்றுகள் நடவு முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
மேலும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் பணிகளின் முன்னேற்றம், மாநில நிதியின் கீழ் சிறுபாசனக் குளங்கள் சீரமைப்புப் பணிகள், தூய்மை பாரதம் (கிராமப்புறம்) – கட்டம் II, நான்கு வகை கழிவு பிரித்தல் நடைமுறை, மத்திய நிதிக்குழு நிதியின் கீழ் சுகாதாரக் கட்டிடங்கள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் , பள்ளிக் கட்டிடங்கள், உள்ளிட்ட கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும்
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2026-27ஆம் ஆண்டிற்கான மீதமுள்ள வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கும் திட்ட முன்மொழிவுகள், இணையவழி திட்ட அனுமதிகள், நிலுவையிலுள்ள உள்ளூர் திட்டமிடல் அனுமதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் வரி வசூல் முன்னேற்றம் ஆகியவை குறித்தும் விரிவான ஆய்வு செய்தார்.
இக்கூட்டத்தில், மருதையாறு வடிநிலக்கோட்டம் தொடர்பான மாவட்டத்தின் அடிப்படை நீர்வள விவரங்கள், நடைபெற்று வரும் பாசனப் பணிகள், சிறப்பு தூர்வாரும் பணிகள், கொட்டரை நீர்த்தேக்கம் அமைக்கும் பணி, நிலம் கையகப்படுத்தல் நிலை, வண்டல் மண் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் 2026-27ஆம் ஆண்டிற்கான புதிய முன்மொழிவுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அரும்பாவூர் பெரிய ஏரி தரப்படுத்தும் பணி, வி.களத்தூர் அணைக்கட்டு சீரமைப்பு பணி, நரி ஓடை மற்றும் பரவாய் ஓடை அணைக்கட்டுகள் புனரமைப்பு உள்ளிட்ட நடைபெற்று வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
அத்துடன், ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்தின் நிர்வாக ஒப்புதல், மதிப்பீடு, நிலம் கையகப்படுத்தல் நிலை, செலவின முன்னேற்றம் ஆகியவை குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், பெரம்பலூர் மாவட்டத்தில் 73 நீர்நிலைகளில் வண்டல் மண் அகற்றப்பட்ட விவரங்கள், விவசாயிகள் பெற்ற பயன்கள், அரசிதழில் அறிவிக்கப்பட்ட நீர்நிலைகளின் தினசரி முன்னேற்றம் ஆகியனவும் பரிசீலிக்கப்பட்டன.
மேலும், 2026-27ஆம் ஆண்டிற்கான புதிய முன்மொழிவுகளின் கீழ், கொளத்தூர் கிராமத்தில் தடுப்பணை கட்டும் பணி, வெண்பாவூர் அணைக்கட்டு பழுது நீக்கி ஏரியை புனரமைக்கும் பணி, பெருமத்தூர் அணைக்கட்டு புனரமைப்பு, கீழ்க்குடிக்காடு கிராமம் அத்தியூர் தலைப்பு மதகு மறுக்கட்டுமானம், மற்றும் சின்னாறு வடிநிலத்தில் உள்ள பல்வேறு ஏரிகளை புனரமைக்கும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
திட்டப் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தரமாக நிறைவேற்றவும், நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் திட்டப் பயன்கள் தாமதமின்றி சென்றடைவதை உறுதி செய்யவும் அமைச்சர் ஆனந்த் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பெரம்பலூர் கலெக்டர் ஷரண்யா, பெரம்பலூர் எம்.எல்.ஏ கி.சிவக்குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497