Perambalur: Police SP instructs drug dealers not to give sedatives and painkillers without a doctor’s prescription!
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து மெடிக்கல் ஸ்டோர்ஸ் மருந்து விநியோகிப்பாளர்கள் மற்றும் கூரியர் சர்வீஸ் அலுவலர்களிடம் போதைப்பொருள் விற்பனையை தடுத்தல் மற்றும் போதை பொருட்கள் ஒழிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் போலீஸ் எஸ்.பி ஆபிசில் நடந்தது. எஸ்.பி ஆதர்ஷ் பசேரா பேசியதாவது:
பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாவதை தடுக்க, போதை பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குவதையும், விற்பனை செய்வதை தடுப்பது எவ்வாறு என்பதையும், போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள், வலி நிவாரண மாத்திரைகள் போன்றவற்றை மருத்துவர் கையொப்பம் இல்லாமல் தரவேண்டாம் என்றும், கூரியர் சர்வீஸ் மூலம் பார்சலில் போதை பொருட்கள் கடத்துவதை தடுக்க உரிய பரிசோதனை செய்தும், போலியான முகவரி மற்றும் சந்தேகப்படும் பார்சல் என தெரிந்தால் உடனடியாக போலீசுக்கு தகவலை தெரிவிக்க வேண்டும் என்றும், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அனுப்பிய பார்சலை கவனமுடன் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், போலி மருத்துவர் என தெரிந்தால் உடனடியாக தகவலை தெரிவிக்க வேண்டும் என்றும், பெரம்பலூர் மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்தழைப்பு தருமாறும் கேட்டுகொண்டார்.
போதைப் பொருளுக்கு அடிமையாவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, மூளை செயல் இழந்து, மனதளவிலும் உடலளவிலும் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே போதைப் பழக்கத்தை முற்றிலும் ஒழித்து போதைப் பழக்கம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் பாடுபடுவோம் என்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன் (தலைமையிடம்), மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாலமுருகன், மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் காமராஜ் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மெடிக்கல் ஸ்டோர்ஸ் மருந்து விநியோகிப்பாளர்கள் மற்றும் கூரியர் சர்வீஸ் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.