Perambalur: Social data census underway in the district; Collector informs!
தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்காக உலக வங்கிநிதி உதவியுடன் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட்டு வரும் ஒரு திட்டமாகும். தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் முக்கிய நோக்கம் கடைக்கோடியில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகளும், மறுவாழ்வு சேவைகளும் இல்லம் தேடி சென்றடைய வேண்டும் என்பதே ஆகும். மேலும், இத்திட்டத்தை செயல்படுத்த சமுதாய வள பயிற்றுநராக சீட்ஸ் (Community Service Provider) தொண்டு நிறுவனம் மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, இத்தொண்டு நிறுவனம் மாவட்டத்தில் 2 ஒருங்கிணைப்பாளர்கள், 4 சமூக பணியாளர், 4 இயன் முறை சிகிச்கையாளர்கள், 7 சிறப்பு ஆசிரியர்கள், 12 சமுதாய வழி நடத்துநர்கள், 28 சமுதாய மறுவாழ்வு பயிற்றுநர்கள் என மொத்தம் 57 நபர்கள் மூலமாக நகர்புறம் மற்றும் கிராமப்புறங்கள் முழுவதும் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகளையும், பொதுமக்களையும் மொபைல் ஆப்மூலம் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை மேற்கொள்ளவார்கள்.
ஆகையால் இல்லம் தேடிவரும் முன்களப் பணியாளர்கள் கேட்கும் ஆவணங்களான ஆதார் கார்டு, ரேஷன் கார்டு மற்றும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ சான்றிதழ், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, மற்றும் தேசிய அடையாள அட்டை உள்ளிட்டவைகளை பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் காண்பித்திடவும், தயக்கமின்றி தகவல்களை அளித்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்க மட்டுமே, பொதுமக்கள் அனைவரும் இந்த சமூகதரவு கணக்கெடுப்பிற்கு முழு ஒத்துழைப்பு அளித்து கணக்கெடுக்கும் பணி சிறப்பாக அமைய உதவிட வேண்டும். மேலும், இது தொடர்பான விவரங்கள் தேவை இருப்பின் மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்திற்குள் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி 04328-225474 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கிரேஸ் பச்சாவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.