Purattasi 3rd Saturday in Perambalur; Special worship from Hindus fasting!
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் புரட்டாசி மாதத்திற்கு தனி சிறப்பு உண்டு. இது மகா விஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். அதுவும் புரட்டாசி சனிக் கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லா விதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுவது வழக்கம். அதன்படி, இன்று புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதற்கொண்டே அலை மோதி வருகிறது.
பெரம்பலூர் கடைவீதி பகுதியில் உள்ள மதனகோபால சுவாமி உடனுறை மரகதவல்லி தாயார் திருக்கோவிலில் புரட்டாசி சனிக் கிழைமையையொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும், தீபாராதனையும் நடந்தது. இதில், அதிகாலை முதலே பக்தர்கள் உள்ளிட்ட ஏராளமான பொது மக்கள் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், தங்களது குடும்பத்தினருடன்நீண்ட வரிசையில் காத்திருந்து, கலந்து கொண்டு பெருமாளை பய பக்தியுடன் வழிபட்டனர்.
இதே போன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். அவர்களுக்கு துளசி தீர்த்தம், லட்டு, நெய் பொங்கல் போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது. வைணவர்கள் நெற்றியில் நாமம் (ராமம்) இட்டு கொண்டனர்.
அசைவம் சாம்பிடுவோர் வழக்கம் போல் இந்த புரட்டாசி முழுவதும் அசைவத்தை தவிர்த்து உள்ளனர்.