பெரம்பலூரில் நேற்றிரவு திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருந்த சிறப்பு இளைஞர் படையைச் சேர்ந்த நபரை கத்தியால் குத்திய இளைஞர்கள் 3 பேரை பெரம்பலூர் போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள கோரையாறு கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி மகன் மணிகண்டன் (23). இவர், அரும்பாவூர் காவல் நிலையத்தில் சிறப்பு இளைஞர் காவல் படையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள திரையரங்கில் உறவினருடன் மணிகண்டன் படம் பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது, அவரது பின் இருக்கையில் அமர்ந்திருந்த 3 இளைஞர்கள் மணிகண்டனுடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில், ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் கத்தியால் குத்தியதில் மணிகண்டன் பலத்த காயமடைந்தார். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த கண்ணன் மகன் பிருத்திவி வாசன் (18), எளம்பலூர் சாலையில் முருகன் கோயில் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் மகன் நீலகண்டன் (எ) சிவா (18), வடக்குமாதவி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சத்தியபிரபா (21) ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு நடதிதி வருகின்றனர்.