Republic Day: Officers’ Consultative Meeting on Preparatory Works in Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசு தினம் வரும் ஜன.26 அன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, விழாவிற்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தெரிவித்ததாவது:
நடைபெற உள்ள குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஏதுவாக அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மேலும் விழா நடைபெறும் அன்று காவல் துறையினர் மூலம் காவல் துறை அணிவகுப்பு, ஊர்காவல் படையினரின் அணிவகுப்பு உள்ளிட்டவற்றை சிறப்பாக நடத்திட காவல் துறையினர் தகுந்த ஏற்பாடு செய்திட வேண்டும்.
மேலும், விழா நடைபெறும் மேடை, தியாகிகள் அமரும் இடம், பயனாளிகள் அமரும் இடம் ஆகியவற்றிற்கு முறையான இடங்களில் சாமியானா பந்தல் அமைத்து இருக்கைகள் அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
இந்திய விடுதலைக்காக போராடிய சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்துதல் உள்ளிட்ட பணிகளையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலமாக கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தல் பணிகளையும் சிறப்பாக செய்ய தகுந்த முன்னேற்பாடுகளை சம்மந்தப்பட்ட துறையினர் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
அனைத்துத்துறைகளின் அலுவலர்கள் தங்கள் துறையின் மூலம் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் மாவட்ட ஆட்சியரால் விழா நடைபெறும் அன்று வழங்கப்பட உள்ளதை முன்னிட்டு, பயனாளிகளை விழா நடைபெறும் இடத்திற்கு தகுந்த நேரத்தில் வருகை புரிவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அனைவருக்கும் முறையான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்திடவேண்டும். விழா சிறப்பாக நடந்திட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும், என பேசினார்.
இக்கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன், துணை கண்காணிப்பாளர் கென்னடி, கட்டிட பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் கணேசன் மற்றும் பிற அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.