A glass viper snake in the house at Perambalur; Firefighters were caught and left in the Forest
பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலம், 10வது வார்டு விவேகானந்தர் தெருவில் வசிக்கும் முகமதுரபிக் என்பவரது வீட்டின் பகுதியில் உள்ள தோட்டத்திலிருந்து கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று நேற்று, வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதனை எதேர்ச்சையாக கண்ட முகமது ரபிக்கின் மனைவி உள்ளிட்ட அவரது குடும்பத்தார், கூச்சலிட்டதுடன் சம்பவம் குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சுமார் 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாதுகாப்பாக பிடித்து எடுத்துச்சென்று வனப்பகுதியில் விட்டனர். இதற்கிடையே முகமதுரபிக்கின் வீட்டிற்குள் பாம்பு புகுந்த தகவலறிந்து ஏராளமானோர் சம்பவ இடத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் சூழலில் இதுபோன்ற விஷ ஜந்துகளின் நடமாட்டம் கிராமப்புறங்களில் மட்டுமல்லாது, நகர்ப்புறங்களிலும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை பொதுமக்கள் கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையோடு, பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற விஷ ஜந்துக்களின் தீண்டலால் ஏற்படும் உயிரிழப்பு போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம்!