Branch Animal Husbandry near Perambalur MLA R. Thamilselvan opened today

பெரம்பலூர் அருகே உள்ள தொண்டமாந்துறை கிராமத்தில் கால்நடை கிளை மருத்துவமனையை தமிழ்செல்வன் எம்.எல்.ஏ இன்று திறந்து வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திற்கு உட்பட்ட தொண்டமாந்துறை கிராமத்தில் தொண்டமாந்துறை, பூஞ்சோலை, விஜயபுரம், அய்யர்பாளையம், கோரையாறு ஆகிய கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் கறவை மாடுகள் வளர்த்து வருகின்றனர். இவர்கள் தங்களது கால்நடைகளுக்கு கருத்தரிப்பு ஊசி போடுவதற்காகவும், நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவும் 6 கி.மீ. தொலைவில் உள்ள அ.மேட்டூர் மருத்துவமனைக்கு கால்நடைகளை ஓட்டிச் சென்று சிகிச்சையளிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது. இதனால் தொண்டமாந்துறையில் கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் தொண்டமாந்துறையில் கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தொண்டமாந்துறை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு விழா இன்று நடைபெற்றது.
விழாவிற்கு கால்நடை பராமரிப்பு துறை மாவட்ட துணை இயக்குநர் செல்வராஜ் தலைமை தாங்கினார். உதவி இயக்குநர் மூக்கன் வரவேற்று பேசினார். விழாவில் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ தமிழ்செல்வன் கலந்து கொண்டு புதிய கால்நடை கிளை மருத்துவமனையை திறந்து வைத்து, கால்நடைகளுக்கான சிகிச்சையை தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் தொண்டமாந்துறை கிராம பொதுமக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்கும் வகையில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் விரைவில் திறந்த வெளிக் கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இவ்விழாவில் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், மாவட்ட அவை தலைவர் துரை, மாவட்ட இணை செயலாளர் ராணி, உள்ளிட்ட பொதுமக்கள், கால்நடைத் துறையினர் கலந்து கொண்டனர். கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.










kaalaimalar2@gmail.com |
9003770497