Deer died in wire fence near Perambalur
பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி கிராமத்தில் கம்பி வேலியில் சிக்கி படுகாயமடைந்த அழகிய புள்ளி மான் உயிரிழந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர், பாடாலூர், வெண்பாவூர், ரஞ்சன்குடி, கீழப்புலியூர், மேலப்புலியூர், சித்தளி, சின்னாறு, கை.களத்தூர், தொண்டமாந்துறை, செம்மலை, பூலாம்பாடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் மான், மயில், காட்டுப்பன்றி, முயல், நரி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குள் உள்ளது.
இவை கோடை காலங்களில் தண்ணீர் தேடி ஊருக்குள் வருவதும் சாலையை கடப்பதும் வழக்கம். அவ்வாறு வரும் போது, வாகனங்களில் சிக்கி விபத்துக்குள்ளாகி இறப்பதும், கிணறுகளில் தவறி விழுந்து உயிரிழப்பதும், தெரு நாய்கள் கடித்து குதறி காயமடைவதோடு, சில நேரங்களில் மாமிசத்திற்காக சமூக விரோதிகளால் வேட்டையாடப்படுவதும் பெரம்பலூர் மாவட்டத்தில் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி கிராமத்தில் உள்ள முருகன் கோவில் பகுதியில் விவசாயி ஒருவரது வயலில், அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலியை தாவிக்குதித்து கடக்க முயன்ற புள்ளி மானுக்கு வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டு துடித்துக்கொண்டிருந்தது.
நான் கண்ட பொதுமக்கள் அந்த புள்ளி மானை மீட்டு வந்து, காயம் ஏற்பட்ட இடத்தில் முதலுதவி செய்து, தண்ணீர் கொடுத்து காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் பொதுமக்களின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது, புள்ளிமான் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தது.
இதுகுறித்து பொது மக்கள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்து கிடந்த ஒன்றரை வயது மதிக்க தக்க பெண் புள்ளி மானின் உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறு ஆய்வு மேற்கொண்டு, பின்னர் வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.