Merchants Association Executives appeal to Collector to announce clear procedure for opening shops
பெரம்பலூரில் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைக்கான தடைஉத்திரவு காரணமாக மருந்துகடைகள் தவிர அனைத்து கடைகள் மூடப்பட்டுள்ளன. பேக்கரி கடைகள் மற்றும் சில புதிய கட்டுபாடுகளுடன் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் மளிகை, உணவு மற்றும் உபயோகப்பொருட்கள் உள்ளிட்ட கடைகளை திறந்தவிட வலியுறுத்தியும், பெரம்பலூரில் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பான பெரம்பலூர் மாவட்ட வணிகர் நலச்சங்கத்தின் தலைவர் சத்யா நடராஜன் தலைமையில் பொதுச் செயலாளர் நல்லதம்பி, துணைத்தலைவர் முகமது ரபீக், இணைச்செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் சாந்தாவை சந்தித்து மனுகொடுக்க சென்றனர். ஆனால் கலெக்டர் அந்த மனுவை தனது நேர்முக உதவியாளரிடம் கொடுத்துவிட்டு அவரிடம் உங்களது முறையீடுகளை கூறுமாறு அறிவுறுத்தினார்.
அந்த மனுவில் கூறிஇருப்பதாவது: பெரம்பலூர் நகரில் கடைகளை முழுமையாக திறக்க கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வணிகர்கள் தங்களது வருமானம் கருதி கடைகளை திறக்கவில்லை. மக்கள் நலன் கருதி திறக்க முன்வருகிறார்கள். பெரம்பலூரில் பழைய பேருந்துநிலையம், பள்ளிவாசல்தெரு, தபால் நிலையத்தெரு பகுதிகளில் அனைத்து தெருக்களிலும் போலீசாரும், நகராட்சி நிர்வாகமும் கொரோனா முன்எச்சரிக்கை தடுப்புகள் ஏற்படுத்தி பொதுமக்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் கடைகளுக்கு செல்லமுடியாதவாறு செய்துள்ளனர்.
இதனால் வணிகர்கள் தங்களது வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். ஆகவே வணிகர்கள்- பொதுமக்கள் நலன் கருதி, தினந்தோறும் கடைகளை திறந்துவைக்கும் நேரத்தையும், தெளிவான கட்டுப்பாடுகள்-நடைமுறைகளை வழங்கி மக்கள் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.