Perambalur: Name your newborn babies in Tamil; MLA Prabhakaran requests pregnant women at community baby shower!

பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 250 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பினை டி.ஆர்.ஓ கண்ணன் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் பெரம்பலூர் முத்துகிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடத்தி வைத்து வாழ்த்திய அவர் பேசியதாவது: .
தமிழ்நாடு முதலமைச்சர், பெண்களின் வாழ்வாதாரம் முன்னேற்றமடைய மகளிர் விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகைதிட்டம் என பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.
மாணவர்கள் காலையில் பசியோடு சென்று கல்வி கற்க முடியாது என்பதை உணர்ந்த தமிழ்நாடு முதலமைச்சர் காலை உணவு திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். இத்திட்டத்தின் சிறப்பை உணர்ந்து, லண்டன் மாகாணத்தில் காலை உணவு திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த திட்டங்கள் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் செயல்படுத்தி வந்த காலம் மாறி தற்போது பல்வேறு உலக நாடுகளிலும் செயல்படுத்தப்படுகிறது என்பது மிகவும் பெருமைக்குரிய செய்தியாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர், மகளிர் மாதந்தோறும் தங்களுடைய குடும்ப செலவிற்கு தங்களுடைய கணவரையும், தங்களுடைய பெற்றோரையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். இத்திட்டத்தை அறிவித்த போது இதற்கு உதவித்தொகை என்று நான் பெயர் வைக்கவில்லை மாறாக உரிமைத் தொகை என்றே பெயர் வைத்துள்ளேன் என கூறினார்.
அனைத்து மகளிருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.5000 அனைவரின் வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான தொகையாக ரூ.3,000 ம், கோடைகால செலவினத் தொகையாக ரூ.2,000 ம் என மொத்தம் 5,000 வழங்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கு அண்ணனாக, அப்பாவாக, உங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்து தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகின்றார். மகளிர் முன்னேற்றத்திற்காகவும், பொருளாதார ரீதியாக அவர்களை முன்னேற்றுவதற்காகவும் திட்டங்களை செயல்படுத்தும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு என்றென்றும் நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கர்ப்பிணி தாய்மார்கள் அரசின் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு, தங்களது குழந்தைகளை நல்ல முறையில் வளர்த்து, சிறந்த கல்வியினை வழங்க வேண்டும். உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு நியுமரலாஜியில் பெயர் வைக்காமல் தூய தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் என கோரிக்கைக விடுத்து நலமுடன் அனைவரும் பிரசவமாகி நன்றாக வாழ வேண்டும் என்றும் வாழ்த்தினார்.
தொடர்ந்து, 250 கர்ப்பிணி பெண்களுக்கும் சீர்வரிசை பொருட்களை வழங்கி தொடங்கி வைத்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், கர்ப்பிணி பெண்களுக்காக தயார் செய்யப்பட்டிருந்த அறுசுவை உணவினை அவர்களுக்குப் பரிமாறி, கர்ப்பிணி பெண்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
அட்மா தலைவர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா இராஜேந்திரன், துணைத் தலைவர் ஆதவன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட வட்டார அலுவலர்கள் பிரேம ஜெயம் (பெரம்பலூர்), பென்னம்மா ,(ஆலத்தூர்), பூமா (வேப்பூர்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497