the purity of Women Week in Perambalur: torranoy women’s health diagnostics based training

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தூய்மை மகளிர் வாரத்தை முன்னிட்டு இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தொற்றாநோய் கண்டறியும் மகளிருக்கான சுகாதாரம் சார்ந்த பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் நடைபெற்றது.

ஊரகப் பகுதிகளில் உள்ள சுயஉதவிக்குழுவினர், கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்களில் 81 நபர்களுக்கு தொற்றா நோய்களை கண்டறிவது குறித்து முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நபர்களுக்கு இன்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா பேசியதாவது:

சுயஉதவிக்குழுக்களைச் சேர்ந்த பெண்கள் சுயசார்புடன் இருக்க வேண்டும். தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் உழைக்க வேண்டும். தங்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் தங்களை சார்ந்துள்ளவர்களுக்கு உணவு, சுகாதாரம், கல்வி ஆகியவற்றை வழங்க முடியும்.

சுகாதாரமாக இருந்தாலே நோய்கள் நம்மை அண்டாது. கிராமப்புறங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தனிநபர் இல்லக் கழிப்பறைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பல்வேறு நோய்கள் உருவாகின்றன.

உங்களுக்கு மட்டுமன்றி உங்கள் ஊருக்கு வந்து செல்லும் நபர்களுக்கும் நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. திறந்தவெளியில் மலம் கழிக்கும் பகுதியில் காலில் செருப்பு அணியாமல் செல்வதின் மூலம் மலத்திலிருந்து உருவாகும் கொக்கிப்புழுக்கள் மனிதர்களின் கால்களின் வழியே உடலுக்குள் சென்றுவிடும். அந்தப்புழுக்கள் உடலுக்குள் இரத்தத்தை உறிஞ்சி வளர்வதால் இரத்தசோகை நோய் ஏற்படும்.

இந்த விளக்கத்தை பெண்களாகிய நீங்கள் உங்கள் ஊர்ப் பொதுமக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் திறந்த வெளியில் மலம் கழிப்பது என்பது ஆரோக்கியமானதல்ல. இதனால் பல்வேறு நோய்கள் ஏற்படும். இனிவரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் இரத்தசோகை கண்டறியப்படும் நபர;களின் இல்லத்தில் கழிவறைகள் இருக்கின்றதா என்ற தகவல்களும் சுகாதாரத்துறையின் மூலம் சேகரிக்கப்பட வேண்டும்.

இன்று உலக மகளிர் தினம் என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்று குறிப்பிட்டு அனைவரும் மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்தனர். ஆனால், முதல் பெண் ஆட்சியர் என்பதை விட இம்மாவட்டத்தில் உள்ள பெண்கள் ஆரோக்கிமானவர்களாகவும், பொருளாதார முன்னேற்றம் அடைந்தவர்களாவும், தன்னம்பிக்கை உள்ளவர்களாவும் இருக்கின்றார்கள் என்பதே எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். எனவே, கிராமப்பகுதிகளில் உள்ள அனைவரது இல்லங்களிலும் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான சமுதாயம் உருவாகுவதை நாம் முன்னெடுத்துச் செல்லலாம், என பேசினார்.

அதனைத் தொடர்ந்து ஸ்கோப் தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் சுப்புராமன் சுகாதாரம் சார்ந்த பயிற்சியினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மகளிர் திட்ட இயக்குநர் தேவநாதன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.சம்பத், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) பாரதிதாசன், மாவட்ட ஊராட்சி செயலர் கணேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!