Unidentified vehicle hit a deer death near in Perambalur
பெரம்பலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையை கடக்க முயன்ற புள்ளி மான் உயிரிழந்து, மானின் சடலத்தை கைப்பற்றி வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே வல்லாபுரம் பிரிவு சாலை பகுதியில் இன்று காலை மேற்கு பகுதியிலிருந்து கிழக்கு பகுதிக்கு செல்வதற்காக சுமார் 3 வயது மதிக்க அழகிய ஆண் புள்ளி மான் ஒன்று திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடந்துள்ளது.
அப்போது அவ்வழியே அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இந்த விபத்தில் புள்ளி மான் கால்கள் முறிந்ததோடு, தலைப்பகுதியில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்ததுள்ளது.
இதுபற்றி தகவலறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த புள்ளி மானின் உடலை கைப்பற்றி வாலிகண்டபுரம் கால்நடை மருத்துவர் மூலம் உடற்கூறு ஆய்வுக்கு பின்னர் பாதுகாப்பாக வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.
புள்ளி மான்கள் இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது மோதினால் விளைவு மோசமாக இருக்கும் என்பதால், மான்களை பாதுகாக்க வனத்துறை உரிய நடவடிக்கை வேண்டும், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.